தொழிலாளர் நலச் சட்டங்களும் வேலை வாய்ப்பும்

நமது நாட்டில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் சுமார் 90 சதவீதம் உள்ளனர். அமைப்பு சார்ந்தவர்கள் 10% மட்டுமே. 100 பேர்களுக்கு மேல் வேலை செய்யும் நிறுவனங்களுக்கு பேக்டரி ஆக்ட் சட்டம் செல்லும். குறைந்த பட்ச சம்பளம், ESI, PF மற்றும் விடுப்புகள். இதை விட முக்கியமாக ஒரு தொழிலாளியை வேலையை விட்டு நீக்க மிகக் கடினமான நடைமுறைகள் உள்ளன. சோம்பேறியானாலும், நேர்மையற்றவனானாலும், தகுதியற்றவனாய் ஆனாலும் அத்தொழிலாளியை வேலையை விட்டு அனுப்புவது மிகக் கடினம். அப்படியே சட்டப்படி நடவடிக்கை எடுத்தாலும், தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும்.

இதன் மொத்த விளைவாக, தொழிற்சாலைகள் புதியவர்களை எடுக்கத் தயங்குவார்கள். ஒப்பந்த முறைப்படி (contract labour) எடுப்படு பரவலாக உள்ளது. ரூ 3500க்கு 8 மணி நேரம் வேலை செய்ய பல்லாயிரம் பேர் தயாராக இருந்தாலும், சட்டத்திற்குப் பயந்து தொழிற்சங்கங்களுக்குப் பயந்து 10 பேர் செய்யும் வேலைக்கு பதில் தானியங்கி இயந்திரங்களைப் பயன்படுத்தும் அவலம் உண்டானது.

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு கடுமையான துன்பங்கள் போதிய வேலை வாய்ப்பின்மை, நிரந்தர வேலை கிடைப்பதில்லை. அமைப்பு சார்ந்த தொழிலாளர்களின், சங்கங்களின் குறுகிய நோக்கத்தால், சுய நலத்தால் அமைப்பு சாராத தொழிலாளர்களுக்கு மேலும் வேலை வாய்ப்பு பெருகாத நிலை உள்ளது.

நாங்கள் ஒரு சிறு தொழிற்சாலை நடத்துகிறோம். அருகாமையில் உள்ள ஒரு பெரிய தொழிற்சாலைக்கு ஜாப் வொர்க் செய்து தருகிறோம். அவர்களிடம் இருப்பது போல நவீன இயந்திரங்கள் எங்களிடம் இல்லை. இருந்தாலும் எங்கள் உற்பத்தித் திறன் (productivity) அவர்களை விட மிக அதிகம். செலவும் குறைவு. எனவே அவர்கள் மேலும் ஆள் எடுத்து உற்பத்தியைப் பெருக்காமல் எங்களைப் போன்ற ஜாப் வொர்க்கர்ஸுக்குக் கொடுக்கின்றனர். அந்தத் தொழிற்சாலையின் அமைப்பு சார்ந்த தொழிலாளர்கள் முறையாக, நேர்மையாக வேலை செய்வதில்லை. யாரையும் வேலையே விட்டு நீக்க முடியாததால் தங்கள் இஷ்டம் போல் வேலை செய்கின்றனர். மேலதிகாரிகளிடம் பயமோ, கீழ்ப்படிதலோ இல்லை. இவர்களின் பொறுப்பற்ற தன்மையினாலும் ஒழுக்கமின்மையினாலும் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகவில்லை. அல்லது அவை எங்களைப் போன்ற சிறு தொழிற்சாலைகளுக்கு ஏற்றமதி செய்யப்படுகின்றன. (எங்களிடம் சம்பளம், அவர்களை விட குறைவு. ஏனென்றால் அதுதான் கட்டுப்படியாகும்)

இடது சாரிகளும் இச்சட்டங்களை மாற்ற எதிர்க்கின்றனர். யதார்த்த உண்மைகளைப் புரிந்து கொள்ள மறுக்கின்றனர். அரசாங்க ஊழியர்கள் பண்பு இதை விட மோசமானது. ஒவ்வொரு நாளும் நான்கில் ஒரு பங்கு அரசாங்க ஆசிரியர்கள் (கிராமப் பள்ளிகளில்) பள்ளிக்கு வருவதில்லை. தட்டிக் கேட்க யாருமில்லை. வேலை போகும் பயமில்லை. தனியார் பள்ளிகளில் இந்நிலை இல்லை. பல்லாயிரம் கோடி ரூபாய்கள் அரசாங்கம் செலவு செய்தும் மாணவர்களுக்கு பயன் இல்லை. ஏன் இந்த நிலை? யோசியுங்கள்.

4 comments:

வடுவூர் குமார் said...

ஏன் இந்த நிலை? யோசியுங்கள்
அடுத்த தேர்தல் வரை யோசிப்போம்.
அப்போது என்ன இலவசம் கிடைக்கும் என்பதை பொருத்து யாருக்கு ஓட்டு போடனும் என்று முடிவெடுப்போம்.:-))

வடுவூர் குமார் said...

அதியமான் என்ற உடனே ஞாபகம் வரவேண்டும் என்பதால் "நெல்லிக்கனி" என்று பெயர் வைத்துவிட்டீர்களோ?

Anonymous said...

இந்த கருத்துக்களுடன் ஒத்துப்போகிறேன் அதியமான்.

// ஒவ்வொரு நாளும் நான்கில் ஒரு பங்கு அரசாங்க ஆசிரியர்கள் (கிராமப் பள்ளிகளில்) பள்ளிக்கு வருவதில்லை. தட்டிக் கேட்க யாருமில்லை. வேலை போகும் பயமில்லை. தனியார் பள்ளிகளில் இந்நிலை இல்லை. பல்லாயிரம் கோடி ரூபாய்கள் அரசாங்கம் செலவு செய்தும் மாணவர்களுக்கு பயன் இல்லை. ஏன் இந்த நிலை? யோசியுங்கள். //

இந்த பிரச்சினையை இன்னும் விரிவாய் யோசிக்க வேண்டும். தனியார் மயமாக்கலைத் தவிர்த்து இதற்கு வேறு ஏதேனும் தீர்வுகள் உள்ளனவா என்று யோசிக்க வேண்டும். ஆனால் எல்லா மொழியிலும் நமக்கு பிடிக்காத வார்த்தையாக யோசித்தல் இருக்கிறது. என்ன செய்ய?????

Ravichandran said...

மிகக் குறுகிய கண்ணோட்டம். தொலைநோக்கற்ற பார்வை. வர்க்கம் சார்ந்த பிரச்சனைகளுக்கு உங்கள் சொந்த அனுபவம் சார்ந்த தீர்வுகள் இறுதித் தீர்வுகளைத் தராது என்பது உறுதி.